என் சின்னஞ்சிறு மகள்
குறுந்தொடர் ( பகுதி - 3 )
சொற்களின் தேன் பருவம்
எப்போதும் விரல் சப்பி உறங்கும் மகளின் குட்டி அதரங்கள், ஒரு மாய கணத்தில் பிரபஞ்சத்தின் பேரதிசய அனுப்பிளவு நிகழ்வு போலே ம்ம்மா... என்றது, அவர்களின் அத்தனை நாட்களின் அதீத காத்திருப்பின் அவிழ்வு, அத்தாழ் திறவு இனி எப்போதும் இன்பம் தரப்போகும் சொற்களால் உடையப் போகும் ஒரு போதையின் காட்டின் போகம் முகிழ்த்தும் மலர் வெளியாகியது, சொற்களின் தேன் பருவம் கனியப் போகும் அசரீரியைக் கண்டு அவர்கள் எல்லையற்ற இன்பத்தில் திளைத்த நொடிகளது, மேலும் அவளின் சொற்களின் மகத்தான கதைகள் தொடர்ந்தது, அச்சொற்களில் பொதிந்த பேரதிசயம் யாதெனில் உணர்வுகளின் லாயத்தில் அவளே உருவாக்கிக் கட்டிய சொற்களை அதன் பந்தய கணத்தில் ஒவ்வொன்றாய் கட்டவிழ்க்கிறாள் என்பதே, அவளின் மொழியாடல்களில் ஒரு முறை உபயோகித்த சொற்கள் மறுமுறை பிரயோகிக்கப்படுவதில்லை ஏனென்றால் அவற்றின் நேர்மைக்காகவும், நேர்த்திக்காகவும், அழகிற்காகவும் இம்மையிலேயே அவைகள் மறுமையின் பேறு கொள்கின்றன ; பின் நாட்களில் அச் சொற்களின் மலர்களை சரி பார்த்து பூரிப்படைய ஏதுவாய் அச்சொற்கள் எல்லாம் அவர்களின் மனோரதங்களின் பூச்செண்டில் மலர்கள் போல பூத்து அலங்கரிக்கலானது ; அவள் உருவாக்கும் சொற்களுக்கு அர்த்தங்கள் இல்லை, அர்த்தங்களே அந்த சொல்லாக தம்மை பிறழ்வித்தன ; ஒரு சொல்லின் நீளத்தில் ஒரு வாக்கியத்தின் ஒட்டுமொத்த அர்த்தம் பொதித்து வைக்க அவளால் மட்டுமே முடிகிறது, மழைத் துளி போன்ற அத்தூய சொற்களுக்கு நகாசுகளோ, பூச்சுகளோ தேவைப்படுவதில்லை, இயல்பின் அர்த்தச் சொறிவை கொணர்ந்து அத்தனை மிருதுவாக உயிரின் விகுதி வரை சென்று தொடும் ஆன்மாவின் இன்பப் பெருக்கெடுக்கும் முத்தக் கீற்றுகள் அவை, ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அழகை பரிமளிக்கும் பெயர் இடுகிறாள் அல்லது அவளின் சொற்கள் எல்லாம் எப்போதும் அழகையே வாசிக்கின்றன, பிரிதொரு தேவைக்கும் ஒரு குழல் ஓசை எழுப்புகிறாள், வீணையின் தந்தியை அழுந்தத் தீண்டிய அதிர்வுகள் போல அவ்வோசைகளின் தகவமைப்புகள் பாசத்தின், பரிவின், கனிவின் லயத்தை தூண்டுகின்றன, ஒவ்வொரு சொற்களின் நீட்சியும் ஒரு தேவையுடன் ஆர்வத்தை கிளறும் கள் போல ததும்புகிறது, அதன் தேவைகள் எல்லாம் புகாரின் நீதிக்கூண்டில் நிற்கும் பேரன்பின் வாதங்களாய் தன்னை மன்றாடிக் கேட்பது என்னவெனில் மிக அண்மையிலிருந்து இளைப்பாற்றும் உயிர் தரித்த ஒரு உயிரின் நிழல், அவ்வுயிரின் இருப்பை அருகிலேயே தக்க வைக்கும் சூட்சுமம் ஒரு மகோன்னதத்தின் ஆதரவு, சார்தலின் ஞானம், அவளின் பசிக்கென ஊறும் மார்க்காம்புகள், வாஞ்சையில் மருகும் ஈடற்ற தாய்மை, மேலும் கொஞ்சம் கொஞ்சல்களுடன் இதழ் ரேகைகள் அவ்வளவே...
இப்படியாக சொற்களின் கனியின் பருவத்தில் கனிந்த அந்த இல்லம் சுகந்தம் மதர்க்கும் மெல்லிய சொற்களின் தூத்தலால் நனைந்த வண்ணமிருந்தது...
~ சூர்யபாலா.,
தொடரும் :-