ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

SP பாலசுப்ரமணியம்...


ஒரு குரல் ஒரு மார்க்கம் போலே

உலகின் அனேக உன்னதங்களையும் 

பரிமளிக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லுமென்றால் அது SP பாலசுப்ரமணியம்...


குழந்தைமைக்கு , தாய்மைக்கு, சேய்மைக்கு, தந்தைமைக்கு, 

காதலுக்கு, காமத்திற்கு, பிரிவிற்கு, பரிவிற்கு, சோகத்திற்கு, புகழுக்கு, வெற்றிக்கு, தோல்விக்கு, ஆறுதலுக்கு என எல்லா உணர்வுகளின் பள்ளங்களிலும் ஒரு மெல்லிய நதியைப் போலே நிரம்பி ஏகி எனது ஒவ்வொரு உணர்வுகளும் கொந்தளிக்கும் கணங்களில் அந்த உணர்ச்சிகளின் பாதம் நனைத்து இளைப்பாற ஏதுவாய் செவியில் ஓடிய அமுதசுரபி நதி அது, 


என் நினைவு தொற்றிய பிராயம் முதல் உடன் பயணித்த பிரிதொரு ஆன்மா, நான் ஆண் என்பதை மறந்து ஒரு ஆணின் குரல் மீது இத்தனை காதல் பொங்கச் செய்த தேவ அதிசயம், கானத்தின் பாவங்கள் ஆரோகணிக்கையில் என் பாவங்களை அவரோகணித்த மத்திமம்,

மனம் தேங்கி நின்ற  வேளைகளில்  புலன்கள் இயங்கச் சொடுக்கிய புதிர் , 

என் தனிமையின் பெரும் மலைச் சரிவுகளில் நிழல் சாய்ந்த தோள், 

என் ஆசையின் விளிம்பில் பெண்டுலம் ஆட்டிய ஊஞ்சல், 

என் காதலின் காய்ச்சல்களை போர்த்திய கம்பளி, 

என் கேவல்களில் விசும்பிய உயிர், என் சோகங்களின் புடம் சேர்த்த சுகம், என் காயங்களை தூண்டிய ரணம், என் மகிழ்வுகளை கொண்டாடிய தோரணம், 

வெறும் வார்த்தைகளை உணர்வுக் கோர்வையாக்கி மனம் உறுத்த ஊதிய புல்லாங்குழல், அனிச்சையாக பதிந்த மனனம் போல நிதம் முணுமுணுக்கும் மனதின் குரல், உள்ளத்தை ஊடருக்கும் குறு வாள், பின் அச்சிதிலங்களை ஒன்றிணைத்துத் தெய்க்கும் குத்தூசி, 

நொதிக்கும் உணர்வுகளின் கசிவை ஒளித்து வைக்கும் பெட்டகம்,

அடிக்கடி புலங்கிச் சலிக்காத மஞ்சம்..


இவையெல்லாம் ஒரு கணத்தில் இழந்ததை ஒப்பாமல் சுயம் இரண்டாக பிளந்து அதிலொன்று இறந்தும், மற்றது மனம் பிறழ்ந்தும் போன தருணம் இது..


உறவுகள் இறந்தால் உரக்க அழுதிடலாம், உடன் இருந்த உணர்வல்லவோ இறந்து 

போனது.


துக்கத்தின் வெம்மை படியும் இந்த பொழுதையும் கூட மீண்டும் அந்த காந்தக் குரலின் சிறு தூத்தல் குளிரச்செய்து விடும்...


இனியெப்போதும் நிகழப் போவதில்லை நேரலைகள், என்றும் அயரப் போவதில்லை நெஞ்சம் உரசும் அந்த இசை அலைகள்...


இறப்பிற்கு தானே அஞ்சலிகள் எல்லாம், இறவா இசைக்கு எதற்கு அஞ்சலி...?


~ சூர்யபாலா.,

புதன், 9 செப்டம்பர், 2020

பயண மார்க்கம்

  


இரவின் தீர்த்தங்கள் உதிரும் துளிகளின் பிரவாகம் பாதையின் தகவுகளுடன் அர்த்தங்களாய் முகிழத் துவங்கியிருந்தது கணங்களில், என் பார்வை முதல் அடியெடுக்க, உன் மையல் இரண்டாம் அடி வைக்க சில தூரம் சலனம் கொண்டோம், உன் புன்னகை அப்பயணத்தின் முதல் திருப்பத்தை தந்தது, அங்கே கொஞ்சம் முயங்கி  இளைப்பாறி இருந்தேன், இளைப்பாறுதல் மடி சாயாமல் எப்படி முழுமை பெறும்?  உன் ஸ்பரிசம் தீண்டி சுகிக்கிறேன், நீயும் அவ்வாறே அதன் அதிர்வெண்களில் கொஞ்சம் தாவித் தவிப் பயணிக்கிறோம், இவ்விரவின் இலக்கை அடைவதற்கு உகந்த வழி யென ஸ்பரிசங்களின் உரசலில் அறிகிறோம் ஆகையால் ; இப்பயணதிற்கு முழுமையாக நம்மை ஒப்புக் கொடுக்கிறோம், உன் மடி தீண்டிய என் இதழ் முத்தங்கள் மேலும் கொஞ்சம் நம்மை நகர்த்த, என் நுதல் மீது இதழ் பதித்து நீயும் கடந்து வருகிறாய் ஒரு முகட்டிற்கு, இரவின் உச்சியில் தீ மூட்டி குளிர் காய்தல் பெருஞ்சுகமல்லவா? சிக்கி முக்கியென ஆலிங்கனத் தணல் துளிர்க்க ஒருவர் உடல் ஒருவருக்கு போர்வையென விரவிக் கலக்கிறோம், களைந்த மஞ்சமெல்லாம் அச்சுவனப் பயணத்தின் தடம், உடல் காய்தல் ரணம்,  அதை மேய்தலும் மேயத் தருவதும் ஏகம் ஊறும் சுகம்...

ஒரு மரணம் போல நாம் இன்னும் அந்த மார்க்கத்தில் இருந்து மீளவே இல்லை... 


~ சூர்யபாலா.,