புதன், 5 ஆகஸ்ட், 2020

பேரின்பத்திற்கு முந்தைய கணம்... ❤️

                    ~ ❤️ ~

இன்றைய நம் இரவின் 
விருந்திற்கு உணவாக நாம் 
இருவருமே ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம், 
இதற்காக பல யுகங்களாய் 
தகவமைக்கப் பட்டு இங்கே 
கொண்டு விடப் பட்டோமல்லவா? 
இது எத்தனை பிரத்தியோகம்..? 
இரு வேறு உணவுகள் தமது 
ஒரே பசியை பூர்த்தி செய்து கொள்வதென்பது எத்தனை விசித்திரமான ஏற்பாடு..? நூற்றாண்டுகளின் இப்பழைய தேவைக்கு, சில ஆண்டுகளுக்கு 
முன்னம் உருவாக்கப் பட்ட நமது 
புதிய உடல்கள் போதுமானதாயென்ன..? இதில் மேலும் உன்னை புதுபித்து எனக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் பொருட்டு, உன்னை ஒவ்வொரு நுனியாய் ஒப்பனை செய்து சரி 
பார்த்துக் கொள்கிறாய், சுய வதை செய்து சதைகளை தின்னக் கொடுக்க உனக்கு தான் எத்தனை பேராவல்..? 
நான் எந்த ஒப்பனைகளுமின்றி ஈன்ற பாலூட்டியின் முலைக் காம்புகள் போல என் ரகசியங்களை உன் விருப்பத்திற்கு விடுவதே என் திண்ணமாய் இருக்கிறேன், ஏனென்றால் பசியின் அமுதை தாமாகவே தேடி அடைதலில் தான் எத்தனை சுவாரஸ்யம் ? 
உனக்கான இன்றைய என் பரிசை தேடித் தேடி தெரிவு செய்வது உன்னை மேலும் ஏமாற்றும் மனப் போக்கு என்பதை நன்கறிவேன் ; மேலும் புணர்ச்சியின் விதியில் புதிய ஒப்பனைகள் கலையப்பட்டு, இந்த பழைய அங்கங்களின் கூறுகளை தானே அடைகிறோம் ? கலைவதற்கு ஏன் இத்தனை பிரயத்தனம்..? கண்ணே மிருகங்கள் ஒரு போதும் அரிதாரம் பூசிக்கொள்வதில்லையே..? துய்ப்பின் பித்து நிலை எய்துவதில் அவைகளுக்கு எந்தத் தயக்கமும் இருப்பதில்லை, பின்னர் அதன் சுவடில்லாமல் மறப்பதிலும் அவைகள் கம்பீரம் தான் : 
எனவே அன்பே என் உண்மையை கலைந்து பார், அதன் ரகசியங்களை அடைகையில் அது உன்னை அசூயை நிமித்தம் சஞ்சலத்தில் ஆழ்த்தலாம், அல்லது அதி பெரும் அற்புதமாய் உன்னை அது பேரின்பத்திற்கு துலங்கச் செய்யலாம், 

என்னில் எதுவுமில்லை  அன்பே !!!
இவ்விரு நிலைக்கும் இத்தனை காலமாய் சமூகக் கட்டமைப்பில் ஊறிய நம் மனித மனோவிகாசமே காரணம் என்பதை அறிவாயா...?

~ சூர்யபாலா.,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக