சனி, 21 மார்ச், 2020

யட்சி  பாகம் : 3  அவளின் அவன் 

அவளின் அவன் 

அவளின் அடி ஆழம் தாண்டி ஆதி வரை சென்று மன நதியின் வேர் தீண்டிய ஓரிரு எளிய காரணங்களால் சுவர் ஏறி குதித்து அவளின் கடற்கரையின் எல்லையில் அலை விட்டுச் சென்ற கிளிஞ்சல்கள் போல வந்து விழும் அவனை, சிறுமி கண்டெடுத்த கிளிஞ்சல் சேகரம் போல உள்ளங்கையில் வைத்து உயிர் அளிக்கிறாள், அவனை ஏற்றுக் கொண்டதின் காரணத்தை மேலும் நியாயப்படுத்த அவனை பேரன்பால் நிரப்ப முயல்கிறாள், அவனுடனான  நெருக்கத்தை உறுதிப்படுத்தவே கொஞ்சம் இடைவெளி தருகிறாள், அவன் சரியாக அந்த இடைவெளியில் நிரம்பி பொருந்திடும் பட்சத்தில், அவனுக்கான அடுத்தக் கட்ட நிபந்தனைகளை வகுத்து ஒவ்வொன்றாய் அதி சாமர்த்தியமாக பதிக்கிறாள், அவள் தன் எல்லையை விஸ்தாரமாக்கி அவனுக்கு இடம் அளித்துக் கொண்டே அவனுடைய எல்லைக்குள் நுழையும் நிகழ்வை துப்புரவாக செய்கிறாள், அவள் தரும் ஒவ்வொரு சிறு சிறு இடை வெளிக்கும் இணையாக பெரும் வெளியாக அவளின் அனுமானங்கள் நீள்கிறது, நீக்கமற இடம் உள்ள இந்த உலகில், ஏக முகங்கள் இருந்தும் ஒரே ஒருத்தனுக்காக மட்டுமே தன் எல்லா உணர்வுகளின் கதவுகளையும் திறந்து வைக்கிறாள்,  ஒவ்வொரு தாழையும் அவன் விலக்கி உள்ளே நுழைய வேண்டி எந்த வித அழைப்பும் சொடுக்காமல் காத்திருக்கிறாள், ஆர்வத்தை தூண்டும் மற்ற உத்திகளை நேர்த்தியாக, கவனமாக இந்த பருவத்தில் கையாளுகிறாள், தன் உணர்ச்சிகளை பணயம்  வைத்து ஒரு வேட்டை மிருகத்திற்கு வைத்த கண்ணி போல அவனை உணர்ச்சிகளால் வேட்டையாட காத்திருக்கிறாள்,  இந்நிகழ்வில் அவனை குருடனாக்கி, ஒரு ப்ரைலி எழுத்து போல சுயம்புவாக மதர்க்கிறாள், பார்வையற்ற ஒருவன் தொடுதலில் தன் உலகை தழுவி ஆன்மாவின் பாஷையில் எதையுமே கிரஹிக்கிறான் இல்லையா? நேரடியாக அவன் ஆன்மாவை கொண்டு வாசிப்பதை போல உன்னத நிலையை அவனுக்கு அளித்து அவளின் ஆன்மாவை தரிசிக்க, சுவைக்க, சார்ந்து, இணைந்து, நெகிழ அவள் பொக்கிஷமாக பாதுகாத்த அங்கங்களுக்கும் மேலான அவளின் ஆன்மாவையும் அவன் தொட்டுணர, இலை மறை காயாக கடை விரித்துத் தருகிறாள், அவன் முதலில் எந்த பதார்தத்தை தெரிவு செய்கிறான், எதை எந்த அளவு கலவையில், சுவைக்கிறான், அதை அவன் எப்படி எல்லாம் புழங்கிறான் ஆகிய பரிபாஷைகளை வாசிக்கிறாள், இதன் நீட்சியாக இருவருக்கும் இடையில் உள்ள அதீத, சுவாதீனங்களை
மிக துல்லியமாக துளி பிசகும் இன்றி கணக்கிடுகிறாள், இப்படி அவளின் அவனை ஒவ்வொரு திருபங்களுக்கும், நிகழ்வுகளுக்கும், சந்தர்ப்பங்களுக்கும் உள்ள தொடர்பை உறுதி செய்து, ஒரு அலையில் மிதக்கும் இலை போல இருவரின் ஏற்ற இறக்கங்களை கோவம், வாஞ்சை, பாசம் கொண்டு சமன் செய்கிறாள், அவள் வரைந்த நூலில் சரியாக பொருந்தும் அவனை சிறு சிறு மலர் தருணங்களில் கோர்த்து, தானே பிரசவித்த ஒரு குழந்தை போல கைகளில் ஏந்துகிறாள், மாற்றி மாற்றி தளும்பும் அவளின் செந்நீர் பள பளக்கும் ஆதுர கண்களில் விழுவது அவன் பிம்பம் மட்டும் அல்ல அவள் விரும்பி பிரத்யேகமாய்  உருவாக்கிய பெரும் பாசக்காரன், கொஞ்சும் ரோஷக்காரன், பேரன்பாளன் அவளுக்கேயுரித்தான உலகில் ஒரே ஒருவனிடம் மட்டுமே அவள் கொண்ட
ஏக போக உரிமையும் அவளின் பாத்தியப் பட்ட புலன் மீது தோன்றிய காப்புணர்வுக்கான அரண் அவன், அதில் நிற்கும் வாயிற் காவலன் அவளே தான், அப்பணி தொய்வுறும் வேளை அவளின் அயற்சியில் அவளுக்கென நீளும் நித்ய கிளைகள் சொறியும் ஏகாந்த நிழலின் சொந்தக் காரன், ஆன்ம அபிமானன் அவளின் அவன்...

~ சூர்யபாலா.,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக