~
❤️
நமக்குள் நிகழ்ந்த
இவ்வலசையின் நீண்ட பிரிவை
எவ்வாறு தாங்கிக்கொள்ள...?
இந் நாட்களில் உன் பெரும்
விளைச்சலில் இருந்து நான் திருடிய
ஒரு தானியம் என் உயிரை
எப்போதும் இயக்கிக்
கொண்டிருக்கும் இல்லையா?
வாதையின் நீட்சியில்
குரல்வளையில் திரண்டு
தழுதழுக்கும் துளிப்புனல் அதற்கு
நீர்வார்க்கும் இல்லையா?
இப்போது நம் கூடு, முள் கொண்டு
கட்ட பட்டதின் அசௌகரியம் பற்றி நீ
அறிந்திருக்க நேரிடும்,
முட்கள் பூக்கும் பருவம் வெகு
தொலைவில் இல்லை என்பதை
மனதில் கொள்,
என் நீண்ட பயணத்தின் அசதியை
உன் குறுஞ்செய்தியின் நகக்கண்கள்
நீவிக் கொண்டிருக்கிறது.,
மூடிய அதன் இமையில் உருளும்
விழிப்பாவையை நான் வருடும்
அழுத்தம் உனக்கும்
விளங்குவதாகவே பாவிக்கிறேன்.,
நீ செலுத்தும் ஸ்மைலீக்கள் விம்மும்
ஒவ்வொரு ரோமக் கால்களையும்
அடைத்துக் கொள்கின்றன,
இப்பெரும் இரவை தொலைவில்
இருந்த வண்ணம் நீ ஸ்ருஷ்டித்துக்
கொண்டிருக்கிறாய் அத்தனை
ஏகாந்தமுடன் ; உனது
விஸ்வத்தில் நான் இங்கே
ஒவ்வொரு கணமும் பணிக்குடம்
உடைத்து வீறிட்டுப் பிறக்கிறேன்
அத்தனை காதலுடன்,
காலம் நம் அகராதியை புதுப் பித்துக்
கொண்டிருக்கிறது, ஆனால் நாம்
அதே பழைய அர்த்தம் பரிமளிக்கும்
வாக்கியங்களை மனனம் செய்து
கொண்டிருக்கிறோம், நல்லதுதான்
வழமையை அசை போடுவது தானே
இந்நேரங்களில் நம் இதயங்களை
துடிக்கச் செய்யும் நெருப்பாகிறது,
நெருக்கத்தில் இருந்த நம்
உடல்களின் வெப்பத்தைவிட
தொலைவில் இருக்கும் நம்
உயிர்களின் வெப்பம் இன்னமும்
ரோகத்தைக் கூட்டுகிறது,
பிரிவை இணைப்பது
நினைவுகளின்றி வேறேது..?
இந்நிலையை எங்ஙனம் தாத்பரிக்க?
ஒரு வண்ணத்துப் பூச்சியின்
வருகைக்காக ஒரு மலர் காத்துக்
கிடக்கிறது.,
அல்லது
உறங்கிக் கொண்டிருக்கும் தாயை
எடுத்துக்கொள்ள ஒரு சிசு
கைவிரிக்கிறது.,
அல்லது
பெரும் அன்பை நிறப்பி வைக்கும்
ஒரு கலன் நிர்வாணம் பூசிக்
கொள்கிறது.,
அல்லது
ஒரு துளி தேனை பெரும் கசப்பு
மெல்லென கசிய விடுகிறது,
அல்லது
வசப்படாத வார்த்தைகளை எழுதி
கசக்கி வீசப்பட்டு மையூரிக் கன்றிய
காகிதம் ; மூச்சு விடுவதற்கென
கொஞ்சம் விரிந்து கொள்கிறது,
அல்லது
அத்தனை சந்தோஷங்கள் நிகழும்
ஒரு திருவிழாவின் முடிவில்
விற்பனை நிகழாது மருகி
காத்திருக்கும் ஒரு பலூன்
வியாபாரியின் துயராகிறது,
அல்லது
ஒரு மரணத்தின் நேர்ச்சியை
எதிர்கொண்டு லயித்துக்கொண்டிருக்கும்
ஒரு உடலின் ஜீவனாகிறது,
பிரிவை சொல்ல ஏனையதுண்டு,
அதை உணர்ந்து கொள்ள பிரிவைத்
தவிர வேறேதும் நிகரான
அடர்த்தியில்லை,
கண்மணியே காதலே ❤️
நீ முத்தாய்ப்பாக சொன்னது :
""வெயிட்டிங் பார் யூ""❤️
என் ஹிருதயம் எப்போதும் எண்ணிக் கொண்டிருப்பது:
""கவுண்டிங் பார் யூ...""❤️
""மிஸ் யூ"" என்ற சொற்களில் தான் எத்தனை நீண்ட பிரபஞ்ச வெளியின் தொலைவு அத்தனை அணுக்கமாய் அண்மித்து வந்து அந்தமெல்லாம் வருடிக் கொடுக்கிறது இல்லையா...?
என் காதலின் கதி அதன் தகுதியை கொஞ்சம் போஷித்துக் கொள்கிறது நீ சொன்ன அந்த ""மிஸ் யூவில்""...
மாறாக என் வரிகளால் நான்
செய்ய நேர்ந்தது யாதெனில் காய்ச்சலின் சூட்டினில் கொதிக்கும் உன் நெற்றியை என் உள்ளங்கையால் தொட்டு, அதன் கொதிப்பின் நிலையை அறிந்து
நீ சொஸ்தமாகிட போர்த்திவிடும்
ஒரு ""லவ் யூ"" என்னும் முத்தம்
மட்டுமே கண்ணே...❤️
தசைகள் பிசகினால் தானே நீவிக்
கொடுக்கும் சுகம் பற்றி அறிய
முடியும்...?
உறவை அறிவோம் பிரிவின்
தூரத்திலிருந்து...
~ சூர்யபாலா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக