~
ஒரு குரல் ஒரு மார்க்கம் போலே
உலகின் அனேக உன்னதங்களையும்
பரிமளிக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லுமென்றால் அது SP பாலசுப்ரமணியம்...
குழந்தைமைக்கு , தாய்மைக்கு, சேய்மைக்கு, தந்தைமைக்கு,
காதலுக்கு, காமத்திற்கு, பிரிவிற்கு, பரிவிற்கு, சோகத்திற்கு, புகழுக்கு, வெற்றிக்கு, தோல்விக்கு, ஆறுதலுக்கு என எல்லா உணர்வுகளின் பள்ளங்களிலும் ஒரு மெல்லிய நதியைப் போலே நிரம்பி ஏகி எனது ஒவ்வொரு உணர்வுகளும் கொந்தளிக்கும் கணங்களில் அந்த உணர்ச்சிகளின் பாதம் நனைத்து இளைப்பாற ஏதுவாய் செவியில் ஓடிய அமுதசுரபி நதி அது,
என் நினைவு தொற்றிய பிராயம் முதல் உடன் பயணித்த பிரிதொரு ஆன்மா, நான் ஆண் என்பதை மறந்து ஒரு ஆணின் குரல் மீது இத்தனை காதல் பொங்கச் செய்த தேவ அதிசயம், கானத்தின் பாவங்கள் ஆரோகணிக்கையில் என் பாவங்களை அவரோகணித்த மத்திமம்,
மனம் தேங்கி நின்ற வேளைகளில் புலன்கள் இயங்கச் சொடுக்கிய புதிர் ,
என் தனிமையின் பெரும் மலைச் சரிவுகளில் நிழல் சாய்ந்த தோள்,
என் ஆசையின் விளிம்பில் பெண்டுலம் ஆட்டிய ஊஞ்சல்,
என் காதலின் காய்ச்சல்களை போர்த்திய கம்பளி,
என் கேவல்களில் விசும்பிய உயிர், என் சோகங்களின் புடம் சேர்த்த சுகம், என் காயங்களை தூண்டிய ரணம், என் மகிழ்வுகளை கொண்டாடிய தோரணம்,
வெறும் வார்த்தைகளை உணர்வுக் கோர்வையாக்கி மனம் உறுத்த ஊதிய புல்லாங்குழல், அனிச்சையாக பதிந்த மனனம் போல நிதம் முணுமுணுக்கும் மனதின் குரல், உள்ளத்தை ஊடருக்கும் குறு வாள், பின் அச்சிதிலங்களை ஒன்றிணைத்துத் தெய்க்கும் குத்தூசி,
நொதிக்கும் உணர்வுகளின் கசிவை ஒளித்து வைக்கும் பெட்டகம்,
அடிக்கடி புலங்கிச் சலிக்காத மஞ்சம்..
இவையெல்லாம் ஒரு கணத்தில் இழந்ததை ஒப்பாமல் சுயம் இரண்டாக பிளந்து அதிலொன்று இறந்தும், மற்றது மனம் பிறழ்ந்தும் போன தருணம் இது..
உறவுகள் இறந்தால் உரக்க அழுதிடலாம், உடன் இருந்த உணர்வல்லவோ இறந்து
போனது.
துக்கத்தின் வெம்மை படியும் இந்த பொழுதையும் கூட மீண்டும் அந்த காந்தக் குரலின் சிறு தூத்தல் குளிரச்செய்து விடும்...
இனியெப்போதும் நிகழப் போவதில்லை நேரலைகள், என்றும் அயரப் போவதில்லை நெஞ்சம் உரசும் அந்த இசை அலைகள்...
இறப்பிற்கு தானே அஞ்சலிகள் எல்லாம், இறவா இசைக்கு எதற்கு அஞ்சலி...?
~ சூர்யபாலா.,
இறவாது இசைக்கும் குரலுக்கு ஏது இறப்பு அருமை சார் - சுடர்விழி
பதிலளிநீக்குமகிழ் நன்றிகள் மேடம்
பதிலளிநீக்கு